Start work on smart ration cards to family cardholders in the perambalur district !
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டைகளை முதலமைச்சர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி துறைமங்கலம் நியாய விலைக்கடையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) துரை ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டைகளை வழங்கினர்.
பெரம்பலுhர; மாவட்டத்தில் முழு நேரமாக 201 நியாய விலைக்கடைகளும், பகுதி நேரமாக 81 நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 282 நியாய விலைக்கடைகளில் 1,71,373 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 48,998 குடும்ப அட்டைகளுக்கு மின்னணு அட்டைகள் வரப்பெற்றுள்ளது.
முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள மின்னணு அட்டைதாரர்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள் மட்டும் சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைக்கு சென்று குறுஞ்செய்தியை அங்குள்ள விற்பனையாளரிடம் காட்டி மின்னணு அட்டைகளைப் பெற்றுக்கொண்டு தங்கள் குடும்ப அட்டையில் மின்னணு அட்டை பெற்றுக்கொண்டதற்கான தகவலை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள விபரம் மற்றும் பொருள்கள் இருப்பு குறித்து அட்டைதாரர்களின் செல்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமன்றி அட்டைதாரர்களுக்கு பொருள் வழங்கப்பட்டவுடன் எவ்வளவு பொருள் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் PDS 107 என டைப் செய்து 9980904040 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பலாம். அல்லது 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்ககபட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) விஜயகுமார், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை) கிருஷ்ணசாமி, பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.