Swachh Bharat Pakhwada camp near in perambalur
பெரம்பலூர் : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் எதிர்வரும் 2019ம் ஆண்டு வருவதை கொண்டாடும் வகையில் மகாத்மா காந்தி அவர்களின் கனவுகளில் ஒன்றான “தூய்மை இந்தியா” என்பதை பெருந்திரள் விழிப்புணர்வு முகாமாக செயல்படுத்த பாரத பிரதமர் அழைத்துள்ளார்.
அதன்படி, இந்திய அரசின் நிலவளத் துறை மூலம் “Swachh Bharat Pakhwada” என்ற பெயரில் செயல்திட்டம் தயரிக்கப்பட்டு நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பாக 01.10.2016 முதல் 15.10.2016 வரை பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் இன்று கீழப்புலியூர் நீர்வடிப்பகுதிக்கு உட்பட்ட சிலோன் காலணியில் நீர்வடிப்பகுதியின் துணை இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் சுத்தமான குடிநீரை பயன்படுத்துதல், குடிநீர் தொட்டியை சுத்தமாக பராமரித்தல், பொதுமக்கள் கழிவறையினை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துக்கொடுத்தல், மக்கள் தங்கள் குடியிருக்கும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகளவில் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறிடும் வகையில் துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த முகாமில் கலந்துகொண்ட நீர்வடிப் பகுதி பயனாளிகள் அனைவரும் பள்ளிக்கூடம் மற்றும் தங்கள் சார்ந்த தெருக்கள், குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி கிராமத்திலுள்ள மற்ற பொதுமக்களுக்கும் சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் நீர்வடிப்பகுதியின் உதவி இயக்குநர் கு.பழனிசாமி, நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர் கு.பெரியசாமி, அ.செந்தில்குமார், குணசேகரன் மற்றும் இரா. ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.