தஞ்சை, திருபரங்குன்றம், அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் சின்னம் பெற ஜெ.ஜெயலலிதா கைரேகை வைத்த வீடியோவை வெளியிட கோரி தமிழ்நாடு முத்திரையர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூரில் தமிழ்நாடு முத்திரையர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு விழா நேற்று ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கருப்பையா தலைமையில் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பி.பாலசண்முகம் வரவேற்றார்.
மாநில தலைவர் காஞ்சிகாடக முத்திரையள், மாநில பொதுச் செயலாளர் மரு. பாஸ்கரன், மாநில விவசாய அணிச் செயலாளர் ஆசிரியர் முகிலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், ஊற்றத்தூர் சுருதிமான்நக்கன் எனும் சந்திரனான ராஜமல்லன் முத்திரையர் நினைவுகளை போற்றியும், விரைவில் சரித்திரத்தை புத்தகமாக வெளியிடுவது,
முத்திரையர் இன மக்களுக்கு தனிஇடஒதுக்கீடு பெற சாத்வீகமான முறையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மத்திய மாநில அரசுகள், கண்டு கொள்ளாததால் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது,
மே.23-ல் பெரும்பிடுகுமுத்திரையர் விழாவை பெரம்பலூரில் கொண்டாடுவது,
முத்திரையர்களுடன் இனமாக சமுதாயங்களான மீனவர்கள், ஊராளி கவுண்டர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், திண்டுக்கல் தேனி மாவட்டங்களை சேர்ந்த வன்னியகுல சத்திரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழக அரசியல் களத்தில் மக்கள் சக்தியை நிரூபிக்க திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்துவது,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75 நாள் மருத்துவமனை சிகிச்சை குறித்தும், மரணத்தை குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் போராட்டம் நடத்துவது,
தஞ்சை, திருபரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய இடைத் தேர்தலின் போது சின்னம் பெறுவதற்காக ரேகை, கையெழுத்திட்டது குறித்த வீடியோவை காட்ட வேண்டும், மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய விதம் சந்தேகம் ஏற்படுத்துவதால் மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும், இல்லையெனில் விசாரணை நடத்தக்கோரியும், இடைத் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்குத் தொடர்வது,
தனி இடஒதுக்கீடு வழங்க கோரி மாவட்டம் வாரியாக போராட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, காமராஜர் வளைவில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார். இந்த சித்திரை நிலவு விழாவில் பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.