The Chief Minister’s medical insurance cardholders call for attachment of Aadhaar number || முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு
பெரம்பலூர் : தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை, தொடர் சிகிச்சை போன்றவற்றுக்கு காப்பீடு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அங்கீகரிக்கபட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காப்பீட்டு நிதியை பெற முடியும்.
இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவக்காப்பீட்டு அட்டை பெற்றுள்ளவர்கள் அதனுடன் ஆதார் எண் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்மூலம் காப்பீட்டு திட்டத்தை வரும் காலங்களில் முறைப்படுத்த உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 33,387 மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படாமல் விடுபட்டுள்ளன.
இந்த உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி முதற்கட்டமாக, பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் நடைப்பெற்று வருகிறது.
இதுவரை பெரம்பலூர் தாலுக்காவில் 780 பயனாளிகளும், ஆலத்தூர் தாலுக்காவில் 570 பயனாளிகளும் தங்களுடைய ஆதார் எண்களை மருத்துவக் காப்பீட்டு அட்டையுடன் இணைத்துள்ளனர். தற்பொழுது வேப்பந்தட்டை மற்றும் குன்னம் தாலுக்காவில் உள்ள கிராமங்களிலும் நடைபெற இருக்கிறது.
அதன்படி, பெரம்பலூர் தாலுக்காவில் குரும்பலூர் பிர்க்காவிலும், ஆலத்தூர் தாலுக்காவில் செட்டிக்குளம் பிர்க்காவிலும்; வேப்பந்தட்டை தாலுக்காவில் வெங்கலம் பிர்க்காவிலும், குன்னம் தாலுக்காவில் கீழப்புலியூர் பிர்க்காவிலும் நடைபெறுகிறது.
எனவே, இம்முகாமில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ள மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ள உறுப்பினர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஆதார் அட்டை, ரேசன் அட்டை மற்றும் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கொண்டு சென்று ஆதார் எண்களை இணைத்துக்கொள்ள அரசு செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.