The demonstration on behalf of the PMK is condemning the state sand quarry Set up near Namakkal
பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதைக் கண்டித்து பாமக சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா குன்னிபாளையம் அருகில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக மாநில துணைப் பொது செயலாளர் பொன்ரமேஷ் தலைமையில் நடபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே பரமத்தி வேலூர் பகுதியில் காவிரியில் தண்ணீர் வராமல் வறண்ட நிலையில் உள்ளதால் ஆற்றுப்பாசனம் அறவே முடங்கிவிட்டது.
கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்ததால் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் காய்ந்துவிட்டன. இந்த நிலையில் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் நீர் மட்டம் மேலும் குறைந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவே இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாமக மாநில துணை அமைப்பாளர் சுதாகர், கிழக்கு மாவட்ட செயலாளர் சதீஷ், நாமக்கல் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.