The deterioration of law and dismantle EB sector: TNEB Employees conference resolution passed
பெரம்பலூர் : மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட மாநாடு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள எம்.எஸ்.ஆர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
முன்னதாக சி..கண்ணையன், வட்டத் தலைவர் இரா.ராஜகுமாரன் தலைமையில் கொடிஏற்றினர். வட்ட இணை செயலாளர் சி.இராஜகுமாரி அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில துணை தலைவர் ரெங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் வேலை அறிக்கை வாசித்தார். வட்ட பொருளாளர் கண்ணன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். திருச்சி மண்டல செயலாளர் எம்.பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி உட்பட பலர் உரையாற்றினர்.
ஊழைப்பதற்கு உடல் நலம் அவசியம் என்ற தலைப்பில் மருத்துவர் சி.கருணாகரன், உரையாற்றினார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பணி நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு, இட ஒதுக்கீடு என அனைத்திற்கும் கையூட்டு பெறப்படுகிறது. அரசியல் குறுக்கீட்டை கைவிடவேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூலி மின் நுகர்வோரிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்படும் கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களின் உழைப்பை சுரண்டி விட்டு இல்லை என்று அறிக்கை அனுப்பும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாநில முழுவதும் ஒரே சீராக சிட் அக்ரிமெண்ட் மூலம் ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியமே சம்பளம் கொடுக்கவேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தம் செய்யவேண்டும் . மின் துறையை சீரழிக்கும் 2015 மின்சார சட்டத்திருத்ததை மத்திய அரசு கைவிடவேண்டும் என தெரிவித்தார்.
மாநாட்டில் பெரம்பலூர் நகர் பிரிவு, அரியலூர் நகர் பிரிவு, ஜெயங்கொண்டம் பிரிவு ஆகிய பகுதிகளில் மின் தடை நீக்க மையம் அமைக்கவேண்டும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தியை உடனே துவங்கவேண்டும், ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை துவங்கிடவேண்டும், மின் விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படும் மஸ்தூர் பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கவேண்டும்,8 ஆண்டு பணி முடித்த மஸ்தூர் பணியாளர்களுக்கு கம்பியாளர் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் கோட்டத்தை தனித்தனி கோட்டமாக பிரிக்கவேண்டும், திருச்சியில் இயங்கி வரும் பெரம்பலூர் வட்ட மின் பகிர்மானத்திற்கு உரிய சிறப்பு பராமரிப்பு பிரிவை பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்யவேண்டும், மின் துறையை சீரழிக்கும் 2015 மின்சார சட்டத்திருத்ததை மத்திய அரசு கைவிடவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக வட்ட இணைசெயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் வட்ட துணை தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.