The state bus which does not pay compensation to the victim is japti

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி செய்து உத்திரவிட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ம. கொத்தனூர் கிராமத்த சேர்ந்த தியாகராஜன் மகன் சிவக்குமார், பெயிண்டரான இவர் கடந்த 2013 மார்ச் மாதம் சேலம் மாவட்டம், ஆத்தூர் சென்று விட்டு சொந்த ஊரான ம.கொத்தனூர் திரும்பி வருவதற்காக சேலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் சிறுபாக்கத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது பேருந்து தலைவாசல் மும்முடி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இரு அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்தி சென்றன. இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன் பாலத்தின் மீது மோதி சென்று விபத்திற்குள்ளானது.

இதில் சிவக்குமாரின் வலது கை எலும்புகள் 3 துண்டுகளாக உடைந்தது. இது குறித்து சேலம் மாவட்டம் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் பெரம்பலூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 7.50 லட்சம் வழங்க உத்திரவிட்டிருந்தது.

உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 404 வழங்க, சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலராஜமாணிக்கம் உத்திரவிட்டிருந்தார்.

அதன் பேரில் கோர்ட் அமீனாக்கள் நாமக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்காக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் உரிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!