Perambalur: The student who fell on the gravel laid to build the road, died by crushing her head on the oncoming truck!
பெரம்பலூர் அருகே இன்று காலை தார் சாலை அமைக்க நிரவி விடப்பட்ட ஜல்லி கற்களில் சென்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில் எதிரே வந்த லாரியில் அடிப்பட்டு தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகள் நர்மதா (20), அரியலூர் அரசு கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை சுமார் 8 மணி அளவில் கல்லூரி செல்வதற்காக மொபட்டில், கொட்டரையில் இருந்து பிலிமிசை சென்று பஸ் ஏறுவதற்காக சென்றுக் கொண்டிருந்தார். பிலிமிசை – ஆதனூர் சாலையில் ரேசன் கடை அருகே வந்த போது அங்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டி நிரவப்பட்டிருந்தது. அதில் நர்மதா மொபட்டில் வந்த போது, ஜல்லி கற்களில் மொபட் சறுக்கியதால் தவறி சாலையில் விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரியில் பின்பகுதியில் சிக்கி பின்டயர் மாணவியின் தலையில் ஏறியது. இதில் ரத்த வெள்ளத்தில், நர்மதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நர்மதாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான கோவிந்தராஜ் மகன் ராஜா என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி ஜல்லி கற்களில் தவறி லாரி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.