The teacher was struck down by the school students near Perambalur
பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் அரசு பள்ளி மாணவர்களை தாக்கிய கம்பியூட்டரை ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பாடாலுார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணிசேகரன். இவர் நடத்திய தேர்வில் சில மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆத்திரமடைந்த இவர் மாணவர்களை சரமாரியாக தாக்கினார். இதில், மாணவி கிருஷ்ணவேணி, கிசோர், வெங்கடேஷ், ஜெனிஸ்ரோஸ், பல்கீஸ், மகாலெட்சுமி உட்பட 25 மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட மாணவர்கள் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த பெரம்பலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, டி.எஸ்.பி., தம்பிமோகன்ராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின்பேரில், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் மணிசேகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, பெரம்பலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார்.