Theft of sheep, goat growers petition to the collector
பெரம்பலுார் : திருடு போன 58 ஆடுகளை கண்டுபிடித்துத்தரக்கோரி, தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கத்தினர், ஆடுகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம், போகலுார் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக பெரம்பலுார் மாவட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து, வயல்வெளிகளில் கிடை அமர்த்தும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு செப்., 5ம் தேதி எளம்பலுார் ராமசாமி என்பவரது வயலில் கிடை அடைத்திருந்தபோது 58 ஆடுகள் இரவில் திருடு போனது. இது குறித்து போலீஸில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆடுகளை திருடிய கும்பலை பிடித்து, ஆறுமுகத்துக்கு சொந்தமான ஆடுகளை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தும் வகையில், மற்ற ஆடுகளுடன் வந்து மனு கொடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவுடன் ஆடுகளை திருடும் கொள்ளையர்களின் விலாசங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை இணைத்து மனுவில் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடு திருடுபவர்கள் கார் மற்றும் வேன்களில் வந்து கொள்ளையடித்து செல்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.