Thief arrested for robbing women alone in Perambalur: Rs. Police seized 45 Savaran jewels worth 22.5 lakhs!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களாக அனுக்கூர், கீழப்புலியூர், அனுக்கூர் ஏரிக்கரை, சு.ஆடுதுறை, கிழுமத்தூர், ஒதியம், தைக்கால், பெரம்பலூர், பீல்வாடி, அருமடல், என்.புதூர் மற்றும் வி.களத்தூர் பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் வயதான மூதாட்டிகளின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயின் உள்ளிட்ட நகைகளை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் சென்று தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு சுமார் 45 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் எஸ் பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட டி எஸ் பி சீராளன் அவர்களின் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், வினோத்கண்ணன், சரவணன், சிவக்குமார் தலைமைக்காவலர்கள் அலெக்ஸ், கிருஷ்ணகுமார், முனீஸ்ராஜா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தொடர் வழிப்பறி செய்து வந்த கொள்ளையர் பற்றி தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர்.
இநநிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஒதியம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் ராமு என்பவரைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், வழிப்பறி கொள்ளையன் ராமு நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி சாலையில் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் போடுவதற்காக தள்ளிக்கொண்டு சென்ற போது , பேரளியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது கழுத்தில் இருந்த சுமார் 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக புகார் கொடுத்தார். அதன் பேரில் கொள்ளையனை கைது செய்து விசாரித்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தததை ஒப்புக்கொண்ட அவனிடமிருந்து, மொத்தம் 14 வழக்குகளில் வழிப்பறி செய்த சுமார் 45 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.