Third place in National Ballistic Tournament: Players meet and greet the Perambalur Collector
இந்திய பள்ளி குடும்பம் (SGF1) நடத்தும் 2019-20 ஆண்டிற்கான தேசிய அளவிலான எறிபந்து போட்டி சட்டிஸ்கர் மாநிலம் துர்க் என்னும் இடத்தில் ஜன.12 முதல் 16 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு யு-17 அணி பங்கேற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர்கள் பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா -வை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு அணிக்கான தேர்வு பெரம்பலூர் மாவட்டம் விஸ்டம் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன், விஸ்டம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அதியமான் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இராஜேந்திரன் தெரிவு சான்றிதழ் வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முகாமில் பயிற்சியாளரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜன.9 அன்று வீரர்களை வழியனுப்பும் விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாரிமீனா, குழந்தைராஜன் மற்றும் உடற்கல்வி ஆய்வாளர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அணி பயிற்சியாளராக பிரபாகரன் மற்றும் அணி மேலாளராக நேரு ஆகியோர் அணியை வழிநடத்திச் சென்றனர்.