To prevent water pollution and ground water pollution: The petition to the Kompleca Namakkal Authority

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும் மற்றும் நிலத்தடிநீரும் மாசுபடுவதை தடுக்ககோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டம் சார்பில் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சாய மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவை நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் மற்றும் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரிலும் பல ஆண்டுகளாக கலக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை குடிப்பதால் வயது வித்தியாசமின்றி புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் வருகின்றது.மேலும் ஆண்கள், பெண்கள்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தைகள் பிறக்காமல் போவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாசுகட்டுப்பாட்டு அலுவலகமும், அதிகாரிகளும் இருந்த போதும் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தவில்லை.
அனைத்து தொழிற்சாலைகளும், நகராட்சிகளும் கழிவுநீரை சுத்தகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்தாமல் தாமதப்படுத்தினால் நாமக்கல் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத மாவட்டமாக மாறிப்போகும். முழுமையாக கழிவுநீரை சுத்திகரிக்காத தொழிற்சாலைகளை இயங்கவிடாமல் அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்கரை ஆலையில் எரிசாராயம் பிரிவிற்கு கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் சுமார் ரூ. 10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையில் அது இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் லாரிகள் மூலம் விளைநிலங்களுக்கு கொண்டு சென்று ஊற்றுகின்றனர்.
இதனால் நிலம் மாசுபடுவதுடன் நிலத்தடிநீர் நச்சுத்தன்மையாக மாறுகிறது. சர்கரை ஆலையில் அறவை சமயத்தில் எரிசாராயம் நீர் அதிகமாக சேமிக்கப்படும். கழிவுநீர் தொட்டி சுத்தப்படுத்தும் பொழுது சுத்திகரிப்பு நிலையம் செயல்படாத நிலையில் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு மோகனூர் பகுதி மக்கள் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் கிடைக்காக அவல நிலை ஏற்பட்டது. எனேவ சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு இயந்திரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் கழிவுநீரை இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திறந்துவிடுகின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்காமல் திறந்த வெளியில் எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது இவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஸ் பொன்னுவேல், மாநில விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகர், மாநிலசெயற்குழு உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் மாவட்ட ஒருங்கைணந்த செயலளாளர்கள் மாதேஸ்வரன், நதி ராஜவேல், பூபதி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497