Transport Minister Sivasankar inaugurated the chess competition at Labbaikudikadu Government Girls High School
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் விழிப்புணர்வு பேரணி, செஸ் போட்டி மற்றும் மாதிரி செஸ் வடிவ போட்டிகளை கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா , மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அப்போது தெரிவித்ததாவது:
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த 1800 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெரம்பலூர் மாவட்ட சாம்பியன் என்ற பெருமையுடன் தமிழ்நாடு அரசின் விருந்தினராக மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் சர்வதேச தரத்திலான இந்த போட்டியை நேரில் காணவும், கிராண்ட் மாஸ்டர்கள் உடன் விளையாடி அவர்களிடம் உரையாடி செஸ் பயிற்சி பெற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் மாதிரி செஸ் வடிவ அமைப்பிலான போட்டி தொடங்கி வைக்கப்பட்டது, என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சரக துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி, வேப்பூர் ஊராட்சி யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவர் ஜாகிர் உசேன். துணைத் தலைவர் ரசூல், செயல் அலுவலர் சதீஸ்குமார், பள்ளிக் கல்வித்துறையினர், பலர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.